Rock Fort Times
Online News

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – * திருச்சியில் நடந்த தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் வலியுறுத்தல்…!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான், மாநில செயலாளர் சபீர் அலி, மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநில தலைவர் அப்துல் கரீம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருப்பரங்குன்றத்தில் தர்கா மற்றும் கோவில் விவகாரத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள், நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஹிந்து, முஸ்லிம் மக்களிடையே மத மோதலையும், வெறுப்பையும் உண்டாக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்ற வார்த்தை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசு அவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தொடர்பான ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை, பேரிடர் காலங்களிலும் முறையான நிவாரணம் தருவதில்லை. மத்திய அரசு நாங்கள் சொல்லும் கல்வித் திட்டத்தை கொண்டுவர வேண்டும், இல்லை என்றால் நிதி வழங்க மாட்டோம் என கூறுகின்றனர். மத்திய அரசு, கல்வி உரிமையை பறிக்கும் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொல்லப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பதை தடுத்த 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசும், காவல்துறையினரும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இஸ்லாமியர் எவ்வளவு என்று கண்டறிந்து அதற்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்