Rock Fort Times
Online News

‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம்?- விவரம் இதோ…!

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு தற்போது “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன் பெறலாம்? அதற்கான சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து
தமிழக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:- நமது நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கப்படும் என்று கடந்த சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். மேலும் இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இத்திட்டத்திற்கு இன்று(17-02-2025) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்த வாரிசுகள், கைம்பெண்கள் ஆகியோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்