திருச்சியில் மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் சிக்கினர்…!
திருச்சி, கே.கே.நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கேகே நகரில் தனது பெயரில் பேட்மிண்டன் அரங்கம் கட்டுவதற்கு மும்முனை மின்சாரம் வேண்டி அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு, கே.கே.நகர் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் (வயது 58) மின் இணைப்பு கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். அவர்களது ஆலோசனையின் பேரில் சீனிவாசன் இன்று(17-02-2025) மதியம் லஞ்சப் பணம் ரூ.10 ஆயிரத்தை சந்திரசேகரின் தனி உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி (34) என்பவரிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து வந்து இருவரையும் பிடித்தனர். இதையடுத்து இருவரையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மின்சார வாரிய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய அதிகாரி பிடிபட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.