திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குளித்தலை பிரிவு சாலை பகுதியில் நேற்று( பிப்.16) இரவு இருவர் ரகளையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் தலைமையில் ஐந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அங்கு சட்டை இன்றி நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் கல்லை எடுத்து பூட்டப்பட்ட டீக்கடை மீது வீசிக் கொண்டிருந்தார். அவரை பிளாக் அண்ட் ஒயிட் ஆடையில் இருந்த மற்றொருவர் தடுக்க முயன்றார். ஆத்திரத்தில் போதை ஆசாமி அவரையும் விரட்டி, விரட்டி தாக்கினார். போலீசார், போதை ஆசாமியை எவ்வளவோ சமாதானப் படுத்தியும் அவர் ரகளை செய்வதை நிறுத்தவில்லை.
பிளாக் அண்ட் ஒயிட் உடை அணிந்திருந்த நபர் மீது போலீசாரின் தலைக்கவசத்தை தூக்கி வீசி தாக்கினார், போதை ஆசாமி. பதிலுக்கு பிளாக் அண்ட் ஒயிட் உடை அணிந்திருந்த நபர், போலீசாரின் வாகனத்தில் சொருகி வைக்கப்பட்டிருந்த லத்தியை எடுத்து அந்த அரை நிர்வாண ஆசாமியை வெளுத்தெடுத்தார். அப்போது தலைமை காவலர் பாஸ்கர் என்பவரின் தலையிலும் ஒரு அடி விழுந்தது. ஒரு வழியாக போலீசார் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலீசார் முன்பு ரகளையில்
ஈடுபட்டதோடு போலீசாரையே தாக்கிய அந்த இருவரும் தந்தை- மகன் என்பதும், வழக்கறிஞர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நடுரோட்டில் போலீசாரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.