Rock Fort Times
Online News

திருச்சியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது…!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். பி.இ. பட்டதாரி. இவர் சொந்தமாக ஜேசிபி எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த எந்திரத்தை விராலி மலையை சேர்ந்த இவரது நண்பர் ரங்கசாமி என்பவரிடம் வாடகைக்கு கொடுத்திருந்தார். அதனை பார்த்திபனுக்கு தெரியாமல் ரங்கசாமி விற்றுவிட்டார். இதனை அறிந்த பார்த்திபன், புத்தாநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் .அதன் பேரில், போலீசார் ஜேசிபி எந்திரத்தை மீட்டு மணப்பாறை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அந்த எந்திரம் பார்த்திபனிடம் ஒப்படைக்கப்படாத நிலையில், அவர் உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, 5 லட்ச ரூபாய்க்கு சொத்து மதிப்பு சான்றிதழை மணப்பாறை நீதிமன்றத்தில் வழங்கிவிட்டு எந்திரத்தை பெற்றுக்கொள்ள உத்தரவிட்டார். சொத்துமதிப்பு சான்றிதழ் வேண்டி கண்ணூர் கிராம நிர்வாக அதிகாரியை பார்த்திபன் நாடினார். அதற்கு கிராம நிர்வாக அதிகாரி அமீர்கான் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்திபன், இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் ஆகியோர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பார்த்திபனிடம் கொடுத்து அதனை கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து பார்த்திபன், கண்ணூர் ஊராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இன்று (25.7.23) காலை சென்று கிராம நிர்வாக அதிகாரி அமீர் கானிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அமீர் கானை கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்