பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா பிரசித்தி பெற்றது. அதேபோல, இந்த ஆண்டுக்கான தேர்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வாக இன்று (ஏப்ரல் 14) காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்து தேரோட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காலை 10-30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஓம் சக்தி…பராசக்தி… கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர். தேர், முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி சென்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், காவடி, பால்குடம், தொட்டில் காவடி எடுத்தும் கோவிலை வந்தடைந்து அம்மனை பயபக்தியுடன் தரிசித்து வருகின்றனர். சமயபுரத்தில் பக்தர்கள் குவிந்துள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Comments are closed.