Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி பகுதியில் போலீசார் அதிரடி வேட்டை: போதை ஊசிகள், மாத்திரைகள், கஞ்சா, மது விற்ற 8 பேர் கைது…!

திருச்சி மாநகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட் பகுதியில் அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர். இதில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு பகுதியில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்றதாக வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். சித்தார்த் என்பவரை தேடி வருகின்றனர். கைதானவரிடம் இருந்து 50 போதை மாத்திரைகள், போதை ஊசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, வடக்கு தாராநல்லூர் பகுதியில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சூர்யா என்கிற சூரியமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 போதை மாத்திரைகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி உறையூர் – குழுமணி சாலையில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது மற்றும் பீர் விற்றதாக உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல எடமலைப்பட்டிபுதூர், பொன்மலை, கோட்டை பகுதிகளில் கஞ்சா விற்றதாக எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த குமார், பொன்மலையைச் சேர்ந்த நிவித்திரன், பெரிய கடை வீதியைச் சேர்ந்த ஜெகதீஷ் , இ.பி. ரோடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த குமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்