திருச்சியில் ஆட்டோ கண்ணாடியை உடைத்து டிரைவரிடம் ரகளை செய்த 2 பேர் கைது- ஆயுதங்களுடன் தப்பி ஓடிய 4 பேருக்கு வலை…!
திருச்சி, பாலக்கரை கெம்ஸ்டவுன் செபஸ்தியார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அருண் பிரான்சிஸ் ராஜ் (39). ஆட்டோ டிரைவரான இவரது வீட்டின் அருகே கடந்த 12ம் தேதி மாலை ஆட்டோவில் அமர்ந்து 6 பேர் கொண்ட கும்பல் சத்தம் போட்டனர். அவர்களை அருண்
பிரான்சிஸ் ராஜ் தட்டி கேட்டார். இதில் , அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த கும்பல் அருண் பிரான்சிஸ் ராஜ் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓடியது. போலீசார் அவர்களை விரட்டி சென்று 2 பேரை பிடித்தனர். 4 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த மேத்தியூ (25), பாலக்கரை முதலியார்சத்திரம் நடுத்தெரு பகுதியை சேர்ந்த முகமது சபிக்கனி (22) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த 96 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயுதங்களுடன் தப்பியோடிய அந்தோணி, சஞ்சய், சிம்சன், ராபர்ட் வின்ஸ்லி ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.