திருச்சியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்- சாலை மறியல்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 18- வது வார்டு பூக்கொல்லை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரம் மற்றும் பணியாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென திருச்சி-தஞ்சை முதன்மை சாலையில் வரகனேரி மாரியம்மன் கோவில் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கவுன்சிலர் சண்முகப்பிரியா, மாநகராட்சி பொறியாளர் புஷ்பராணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் பகுதியில் வரி வசூல் செய்து, இது நாள் வரை சரியான சாலை அமைத்து தரவில்லை. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் கூட தராமல் வந்துள்ளீர்களே, நாங்கள் எங்கு செல்வோம் என ஆவேசமாக கேட்டனர். அப்போது காவல் உதவி ஆணையர் ஜெயசீலன், காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கை குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Comments are closed.