திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான திருச்சி வயலூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலின் வைகாசி விசாக தேர்த் திருவிழா கடந்த மே 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் 9ஆம் நாளான இன்று (மே 28) காலை 10.30 மணியளவில் கடக லக்னத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் பூக்களாலும், வண்ணத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அழகிய திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இதில் “முருகனுக்கு அரோகரா” என்ற பக்தி முழக்கத்துடன் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அழகிய அலங்காரத்துடன் திருத்தேர் நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது. தேர்த் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் இணைந்து சிறப்பாக செய்திருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டனர்.

Comments are closed.