தமிழக அரசு ஆண்டுதோறும் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பதும், ஜனவரி 28- ம் தேதி தண்ணீரை அடைப்பதும் வழக்கம். அவ்வாறு தண்ணீர் திறக்கப்படும் போது காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்களில் ஒரு சில நாட்கள் மட்டுமே தண்ணீர் செல்லும். ஆனால், உய்யக்கொண்டான் வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வரும். அதன் அடிப்படையில் திருவெறும்பூர், கிளியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சம்பா நெற்பயிர், பருவநிலை மாற்றத்தாலும், பூச்சி தாக்குதலுக்கு உள்ளானதாலும், ஒரு சில இடங்களில் இன்னும் கதிர் வந்தும், வராமலும் பால் பிடித்தும், பிடிக்காமலும் உள்ளது. அப்படி உள்ள பகுதிக்கு தண்ணீர் உய்யகொண்டான் வாய்க்கால் மூலம் செல்ல வேண்டும். இந்தநிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ விளாங்குளம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் பாதி கதிர் வந்தும், வராமலும் உள்ளது. இந்தநிலையில் உய்யகொண்டான் வாய்க்கால் மூலம் கிளி வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இதனால் பல நூறு ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகிறது. ஒரு சில விவசாயிகள், கிளி வாய்க்காலில் மோட்டார்களை வைத்து தண்ணீர் இறைத்து வருகின்றனர். இருந்தும் பல நூறு ஏக்கரில் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் காய்வதால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு போதிய விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் தற்போது தண்ணீர் இல்லாமல் கீழ விளாங்குளம் பகுதியில் நெற்பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் பெறும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, கிளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழவிளாங்குளம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் சம்பா நெற்பயிரை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.