Rock Fort Times
Online News

விவசாயிகளுக்கு குட் நியூஸ் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு…!

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரியில் கடந்த 2 வாரங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று (சனிக்கிழமை) மாலையில் விநாடிக்கு 1,18,296 கன அடியாகவும், இரவு 1,23,184 கன அடியாகவும் இருந்தது.  தொடர்ந்து, நீரின் அளவு அதிகரித்து இன்று( ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு விநாடிக்கு நீர்வரத்து 1,34,115 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 1.34 லட்சம் கன அடிக்கு நீர்வரத்து வருவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.  அணையின் நீர்மட்டம் நேற்று காலை 99.11 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 107.69 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 63.69 டிஎம்சியாக இருந்த நிலையில், 75.16 டிஎம்சியாக உயர்ந்தது. கடந்த ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8.58 அடியும், நீர் இருப்பு 11.47 டிஎம்சியும் உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர் இருப்பு 93 டிஎம்சியை எட்ட இன்னும் 17 டிஎம்சி தான் வேண்டும். அதேபோல், முழு கொள்ளளவான 120 அடியை எட்ட 12 அடி வேண்டும். இதனிடையே, ஒகேனக்கலுக்கு இன்று காலை விநாடிக்கு 1.52 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், கர்நாடக அணைகளில் இருந்தும் அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் உயர வாய்ப்புள்ளது.  அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் டெல்டா பாசனத்திற்கு உதவும் வகையிலும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  நீர்வரத்தை பொறுத்து திறக்கப்படும் தண்ணீர் அளவை படிப்படியாக உயர்த்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்டா மற்றும் காவிரி மாவட்ட மக்களுக்கு தண்ணீர் திறப்பு குறித்த தமிழ்நாடு அரசின் உத்தரவு மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்