Rock Fort Times
Online News

மணப்பாறையில் ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை பாரத சாரண- சாரணியர் இயக்க வைரவிழா- பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜனவரி 28-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந்தேதி வரை பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணி நடைபெறவுள்ளது. இதற்காக பெருந்திரளணி சபை, திட்டக்குழு, தொழில் நுட்பக்குழு, செயல்பாட்டுக்குழு மற்றும் 33 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இயக்குநர்களும், குழு ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், சாரண சாரணிய திறன்கள், ரங்கோலி, நாட்டுப்புற நடனம், திறன்வெளிப்பாடு, அணிகூட்டம், உலகளாவிய கிராமம், இளைஞர் மன்றம், உணவுத் திருவிழா, ஒருமைப்பாடு, விளையாட்டு, பல்வண்ண பேரணி, வீர தீர செயல்பாடுகள், அறிவுசார் செயல்பாடுகள், நடைபயணம், மிதிவண்டி பயணம், ராணுவம், விமானப்படை மற்றும் காவல்துறை சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்களது கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்ட உள்ளனர். இந்த பெருந்திரளணி நிகழ்விற்காக மேடை, அரங்கங்கள் அமைக்கும் பணிகள், கூடாரங்கள் அமைக்கும் பணிகள், மின்சார வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், சமையற் கூடங்கள், முக்கிய பிரமுகர்களுக்கான அறைகள், கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது அவர் பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்