Rock Fort Times
Online News

கோபி அருகே துயர சம்பவம்: கடன் தொல்லையால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன்- மனைவி தற்கொலை…!

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவரது மனைவி பாலாமணி (29). இவர்களுக்கு வந்தனா(10) என்ற மகள், மோனீஸ் (7) என்ற மகன் என இரு குழந்தைகள். கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் படித்து வந்தனர். தனசேகரும், பாலாமணியும் வெள்ளாங்கோயிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். தனசேகர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும், இதனால் அவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று ஜனவரி 15ம் தேதியும் அவர்களுக்கிடையே கடன் தொடர்பாக மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில், குழந்தைகளை கொன்று விட்டு இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து நேற்று மதியம் தென்னை மரத்தில் வண்டுகளை கட்டுப்படுத்த பயன்படுத்தும் மாத்திரைகளை, குளிர்பானத்தில் கலந்து மகள் வந்தனா மற்றும் மகன் மோனீசுக்கு கொடுத்து உள்ளனர். இருவரும் சிறிது குடித்தபோதே, கசப்பு காரணமாக கீழே துப்பி விட்டு கதறி அழுதுள்ளனர்.

அதற்குள் தனசேகரும், பாலாமணியும் மாத்திரைகளை தின்றதால், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து, நான்கு பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே தனசேகரும், பாலாமணியும் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்தனாவும், மோனீசும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் இருவரும் இன்று (16-01-2025) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினை காரணமாக குழந்தைகளை கொன்று விட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்