திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியில் ஸ்டார் நகரில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஏர்போர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாலாட்சி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தினர். அப்போது அந்தக் கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பெட்டி, பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பொன்மலை பெருநகரைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் கோணக்கரை சுடுகாடு பகுதியில் ரோந்து சென்றபோது சுடுகாட்டு பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த அரியமங்கலம் நேருஜி நகரை சேர்ந்த பாஸ்கர் ( 50) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு சம்பவத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் பால்பண்ணை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக கதிரவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி கார்த்திகேயன் என்கிற பேக் வியாபாரியிடம் பணம் பறித்ததாக அர்ஜூன் என்ற வாலிபரை எடமலை பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Comments are closed.