சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று( 01-12-2024) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். இதில், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என சுமார் 5 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட எஸ்.ஜே.சூர்யாவுக்கு 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதேபோல பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளில் உலக அரங்கில் சாதிக்க வழிகாட்டியாக இருந்த பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த்க்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவர், இந்தியாவில் பிரபலமடையாத பேட்மிண்டன் விளையாட்டில் கால்பதித்து சாதித்ததோடு தன் மாணவர்களையும் வெற்றி கனியை எட்ட உத்வேகப்படுத்தினார். இவரின் இந்த சாதனையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.