மண்ணச்சநல்லூர் அருகே பிரபல வங்கியில் திடீர் தீ விபத்து- வேறொரு அறையில் பணம், நகைகள், சொத்து ஆவணங்கள் இருந்ததால் தப்பின…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்து திருப்பைஞ்ஞீலி பகுதியில் பிரபல வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் திருப்பைஞ்ஞீலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். நேற்றைய தினம் வழக்கம்போல பணிகளை முடித்துவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் வங்கியின் உட்புறம் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை பார்த்த அருகில் வசிப்பவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வங்கி திறக்கப்பட்டது. அப்போது வங்கியில் உள்ள பல பொருட்கள் தீயில் கொழுந்து விட்டு இருந்து கொண்டிருந்தன. தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வங்கியில் உள்ள இரண்டு கணினி, சிசிடிவி கேமரா மற்றும் பல பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. வங்கியில் உள்ள பணம், நகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியவை மற்றொரு அறையில் இருந்ததால் தீயிலிருந்து தப்பின. இதுதொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், வங்கியில் உள்ள ஒரு மின்விசிறி நிறுத்தப்படாமல் தொடர்ந்து ஓடியதால் அதில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.