திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, இராசாம்பாளையத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவர் தனது கிராமத்தில் தாத்தா பெயரில் உள்ள நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அதன்பேரில், இராசாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் நந்தகுமார் என்பவரை கடந்த 05.08.2026-ம் தேதி சந்தித்து மனு தொடர்பாக கேட்டபோது பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிவேல், இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 7) திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்
அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அவர் அந்த ரூபாய் நோட்டுக்களை கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமாரிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், காவல் ஆய்வாளர் சேவியர் ராணி மற்றும் போலீசார் பாய்ந்து சென்று நந்தகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் இதேபோல வேறு யாரிடமாவது லஞ்சம் வாங்கி இருக்கிறாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.