Rock Fort Times
Online News

10 நாட்களில் 3 பேர் விபத்தில் பலி:- சர்வீஸ் சாலை அமைக்க கோரி திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் பொதுமக்கள் மறியல்! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள பி.கே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி( வயது 50). விவசாயியான இவர் தனது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று சுப்பிரமணி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடலில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பி.கே.அகரத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த லால்குடி கோட்டாட்சியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த 10 நாட்களில் பி.கே அகரம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் இதே இடத்தில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் சார்பில் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பேரிகார்டு எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மறைப்பதால் தான் இந்த விபத்து ஏற்படுவதாக குற்றம் சாட்டியதோடு சாலையை கடப்பதற்கு இந்த பகுதியில் சர்வீஸ் சாலை அல்லது சுரங்க வழித்தடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்