திருச்சியில் டாட்டூ கடையில் நாக்கு பிளவு ஆபரேஷன் செய்ய மருத்துவக் கருவிகள் கிடைத்தது எப்படி?- 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நாளை விசாரணை…!
திருச்சி வெனிஸ் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (வயது 25)என்பவர் சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் ஏலியன் டாட்டூ என்ற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் ஜெயராமன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், ஹரிஹரன் நாக்கு பிளவு ஆபரேஷன் செய்து அதனை தனது செல்போனில் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபோன்ற நாக்கு பிளவு ஆபரேஷன்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என்றும், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் பதிவிடப்பட்டன. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில், கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த ஹரிஹரன் அவரது நண்பர் ஜெயராமன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
மேலும், அந்த டாட்டூ வரையும் கடைக்கு “சீல்” வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆபரேஷன் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு மருத்துவ கருவிகள் கிடைத்தது எப்படி? என்று மருத்துவத்துறை அதிகாரிகளும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சூழலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரனிடம் விசாரணை மேற்கொள்ள மருத்துவத்துறை சார்பில் மத்திய சிறை நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், சுகாதாரத்துறை இணை இயக்குனர், நகர் நல அலுவலர், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஹரிஹரனிடம் நாளை(19-12-2024) விசாரணையை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபரேஷன் செய்யும் கருவிகள், மயக்க மருந்து எங்கிருந்து வாங்கப்பட்டன?, யார் கொடுத்தது? எத்தனை பேருக்கு நாக்கு பிளவு சிகிச்சை செய்துள்ளார்கள் என்ற அடிப்படையில் விசாரணை இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த அறிக்கை மருத்துவத்துறைக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனவும் தெரிகிறது.
Comments are closed.