திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் காவல்துறை அதிகாரி ஜெயகௌரி திடீர் ஆய்வு…!
தமிழ்நாடு காவல்துறைக்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக 3,665 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான 7 மாதகால அடிப்படை பயிற்சி கடந்த 4 ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 8 நிரந்தர காவல்துறை பயிற்சி பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மாநகரம், தர்மபுரி, நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 330 இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. இந்நிலையில் காவல்துறை பயிற்சி தலைமையக காவல்துறை தலைவர் ஜெயகௌரி திருச்சி காவல் பயிற்சி பள்ளிக்கு திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் காவலர்களிடையே கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கடந்த மாதம் 27 ம் தேதி தமிழக முதல்வர், காவலர்களுக்கு கூறிய அறிவுரைகளை எடுத்துகூறி அதனை கண்டிப்பாக ஒவ்வொரு காவலர்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். முன்னதாக, காவல் பயிற்சி பள்ளிக்கு வந்த ஜெயகௌரி க்கு காவல் பயிற்சி பள்ளி முதல்வர் பாரதிதாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த ஆய்வின் போது காவல் ஆய்வாளர்கள் சித்ரா மற்றும் பிரான்சிஸ் மேரி ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.