திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் பகுதியில் வசிப்பவர் கே.கண்ணன். இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள்ளார். இவரது கட்டிட பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு காட்டூர் கணேஷ் நகர் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரும் பாஜக பெண் பிரமுகர் ரேகாவை அணுகி உள்ளார். ரேகா, குஜராத்தில் மலிவு விலையில் டைல்ஸ் வாங்கி தருவதாக தொழிலதிபர் கண்ணனிடம் கடந்த 15-10-2022, 19 -10 -2022 ஆகிய தேதிகளில் ரூ 2.20 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டார். ஆனால், சொன்னபடி டைல்ஸ் வாங்கி தரவில்லை. இதுகுறித்து கண்ணன் கேட்கவே ரேகா வாங்கிய பணத்திற்கு செக் கொடுத்துள்ளார். அந்த செக்கை வங்கியில் டெபாசிட் செய்தபோது பணமின்றி ரிட்டன் ஆகிவிட்டது. இது குறித்து கண்ணன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டர் சந்திரமோகனிடம் புகார் செய்யவே, ரேகாவை நேரில் அழைத்து விசாரித்தார். அப்போது ரேகா விரைவில் பணத்தை திருப்பி தருவதாக எழுதிக் கொடுத்து விட்டு சென்றுள்ளார். அதன்பிறகும், அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவெறும்பூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கண்ணன் புகார் செய்தார். இதேபோல, திருச்சி உறையூர் பகுதியில் சேர்ந்த ஒருவரிடமும் டைல்ஸ் வாங்கித் தருவதாக ரேகா ஏமாற்றியதும், இது தொடர்பாக உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.