டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படை மேற்கு டெல்லியில் உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு போதைப் பொருள் கடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக அங்கிருந்த சென்னையை சேர்ந்த முகேஷ் (வயது 33), முஜிபுர் ரகுமான் (34), விழுப்புரத்தை சேர்ந்த அசோக் (34) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது, தமிழ் சினிமா தயாரிப்பாளரும், சென்னை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என தெரிய வந்தது. இதையடுத்து தி.மு.க.வில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். தற்போது ஜாபர் சாதிக் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடையதாக மேலும் சிலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதி அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் ஒட்டி உள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. அது, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஒட்டப்பட உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.