Rock Fort Times
Online News

திருச்சி : இரும்புக்கம்பியால் தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளி…

சக தொழிலாளிகள் வெறிச்செயல்...

திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 57). இவர் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வீட்டின் உட்புறத்தை அழகு படுத்துவதற்காக நாமக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை அணுகி உள்ளார். அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர் சர்மா (31), சேட்டு (28), சச்சின் (28) ஆகிய 3 நபர்களை கண்ணையன் வீட்டிற்கு பணிக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் கண்ணையன் வீட்டின் கீழ்புறத்தில் ஒரு அறையில் தங்கி பணி செய்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் தர்மேந்தர் சர்மாவை சேட்டு, சச்சின் ஆகிய இருவரும் இரும்பு கம்பியால் தாக்கினர். இதனை பார்த்த கண்ணையன் அவர்களை சத்தம் போட்டு உள்ளார். உடனே அவர்கள் இரண்டு பேரும் கண்ணையனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் படுகாயத்துடன் கிடந்த தர்மேந்திர ஷர்மாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கண்ணையன் அளித்த புகாரின் பேரில் சேட்டு, சச்சின் ஆகிய இருவர் மீதும் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற  இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்