விடுதிக்கு வரவழைத்து விவசாயியை தாக்கி செல்போன், பணம் பறித்த 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது- 7 கார்கள் பறிமுதல்…!
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த 40 வயதான விவசாயி ஒருவருக்கும், சின்னாளப்பட்டியை சேர்ந்த கணவரை இழந்த பவித்ரா (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் நேரில் சந்தித்து உல்லாசமாக இருக்கலாம் என்று
விவசாயியிடம், பவித்ரா ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து அந்த விவசாயி, அந்தப் பெண் அழைத்த பழனியில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பவித்ராவுடன் வேறு ஒரு பெண்ணும் இருந்துள்ளார். பின்னர் 3 பேரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் பவித்ராவின் ஆண் நண்பர்கள் 3 பேர் விடுதி அறைக்குள் திடீரென நுழைந்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து அந்த விவசாயியை அடித்து உதைத்ததுடன் செல்போனில் வீடியோ எடுத்தனர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரத்தை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இது ஒருபுறம் இருக்க
மறுநாள் பணம் பறித்த அதேகும்பல் விவசாயியிடம் பெண்களுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்துள்ளோம். அதை சமுக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என கூறி மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி, நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், மோசடி கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் விவசாயியிடம் பணம் பறித்த கும்பல் பழனி பகுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார், பவித்ரா மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த காமாட்சி (25), அவர்களது ஆண் நண்பர்களான குணசேகரன் (41), லோகநாதன் (28), பாலமுருகள் (37) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 கார்கள், 2 செல்போன்கள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.