கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் (மே 21) கடைக்கு சென்ற 10 வயது சிறுமி முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்பட்டது. இதற்கிடையே, போலீசாரின் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தான் சிறுமியை கடத்தி, கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், கைதான கார்த்திக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் கோவை விரைந்தார். மாணவி கொலை செய்யப்பட்ட குளக்கரை பகுதியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, சூலூர் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல காவல் துறை ஐஜி ரம்யா பாரதி, டிஐஜி சாமிநாதன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை நடத்தினார். மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல் ரோந்து பணியை அதிகரிக்கவும், குற்ற சம்பவங்கள் நடைபெறும் பகுதியை கண்டறிந்து அந்த பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.