Rock Fort Times
Online News

சொந்த ஊர் செல்ல முண்டியடிப்பு: பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த திருச்சி பஸ், ரயில் நிலையங்கள்…

பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள், படிப்புக்காக வெவ்வேறு ஊர்களில் தங்கி உள்ள மாணவ, மாணவிகள் பொங்கல் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.  அவர்கள் திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் இன்று(14-01-2024) கூடியதால் அங்கு கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில், தென் மாவட்டத்திற்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் 2 தற்காலிக பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தபோதிலும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் விடிய, விடிய பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தென் மாவட்டத்திற்கு பஸ்சில் அதிக அளவு கூட்டம் இருந்தது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின்பேரில், துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக கடைவீதி, மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்