திருச்சியில் நிலம் கிரையம் செய்து தருவதாக கூறி ரூ. 70 லட்சம் மோசடி செய்த நபரை குற்றப்பிரிவு போலீஸர் கைது செய்துள்ளனர். திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பது : திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் சொந்தமாக இடம் வாங்க, நில முகவர்களை தேடி வந்தேன். அப்போது ஜனாதிபதி அலுவலகத்தில் மருத்துவராக பணியாற்றி வருவதாகவும், தன்னிடம் விற்பனைக்கு நிலம் இருப்பதாகவும் கூறி ராஜேஷ்கண்ணா என்பவர் அறிமுகமானார். அவரது நிலத்துக்கான பத்திரங்களையும் எனக்கு அனுப்பிவைத்தார். அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் பார்த்ததில் வில்லங்கம் ஏதும் இல்லை என்று வந்தது. இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட அந்த நிலத்தை பத்திரம் செய்ய முடிவு செய்து, நிலத்துக்கு முன்பணமாக ரூ.70 லட்சத்தை வங்கி மூலமாக பறிமாற்றம் செய்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர், அதன் பின்னர் மாயமானார். அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, எனது பணத்தை மீட்டு தாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி, துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது, அதன்படி, திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த கென்னடி என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ராஜேஷ்கண்ணா என்ற பெயரில் அறிமுகமாகி நிலமோசடியில் ஈடுபட்டது
தெரியவந்தது. இது குறித்து கைதான கென்னடி போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாவது.,திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் நான் கணினி பொறியாளராக இருந்தும் படிப்புக்கேற்ற வேலையோ, வருமானமோ கிடைக்கவில்லை. இதனால் நான், ஜனாதிபதி மாளிகையில் மருத்துவராக பணியாற்றி வருவதாக பலரிடமும் கூறிவந்தேன். இதன்மூலம் நல்ல மதிப்பு கிடைத்தது. அதனைக்கொண்டு இணைய வழியில் நிலம் தேடுபவர்களை நோட்டமிட்டு, அவர்களுக்கு வலை விரித்து நிலத்துக்கான ஆவணங்களை அனுப்பிவைப்பேன். பின்னர் அவர்களை நம்பவைத்து நிலத்துக்கு முன்பணம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார். இதுபோல கோடிக்கணக்கில் அவர் மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, கென்னடியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான ஆவனங்களையும் பறிமுதல் செய்தனர். இவர் திருச்சி மாநகராட்சி (திமுக) உறுப்பினர் காஜாமலை விஜய்யிடமும் ரூ.40 லட்சம் வரையில் மோசடி செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.