கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில், நாங்குநேரி பகுதியில் ஏறிய காவலர் ஆறுமுக பாண்டியனுக்கும், நடத்துநருக்கும் பயணச்சீட்டு எடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்போது பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, அது காவல்துறைக்கும், போக்குவரத்து துறைக்குமான பிரச்னையாக வெடித்தது. இதுகுறித்து விளக்கமளித்த போக்குவரத்து கழகம், வாரண்ட் இருந்ததால்தான் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் இல்லையென்றால் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்றும் கூறியது. இதனால், பல இடங்களில், அரசுப்பேருந்து ஓட்டுநர்கள்மீது சீருடை முறையாக அணியவில்லை, சீட் பெல்ட் போடவில்லை என பல காரணங்களைக் கூறி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வந்தனர். அந்தவகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூடுதல் நேரம் நிறுத்தப்பட்டிருந்த 10 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினரால் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. அவர்களிடையே சமாதானம் ஏற்படுத்த மேல்மட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் சமாதானம் ஏற்பட்டு சம்பந்தப்பட்ட கண்டக்டரும், போலீஸ்காரரும் வரவழைக்கப்பட்டு சமாதானம் செய்து வைக்கப்பட்டனர்.
இதன்மூலம் தமிழக காவல்துறை, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு இடையே நிலவிய பனிப்போர் முடிவுக்கு வந்தது. இந்தநிலையில் திருச்சி மத்திய பஸ் நிலைய பகுதியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ.பத்மநாபன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் . அப்போது அவருடன் ஆர்.எஸ்.ஐ.ஆரோக்கியராஜ் உடன் இருந்தார். அவர்கள் இருவரையும் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்படி, எஸ்.எஸ்.ஐ. பத்மநாபன் உறையூர் போக்குவரத்து பிரிவிற்கும், ஆர்.எஸ்.ஐ. ஆரோக்கியராஜ் பாலக்கரை பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Comments are closed.