செந்தில் பாலாஜி விவகாரம்: தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட அமலாக்கத் துறை…!
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த அனைத்து ஜாமீன் மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், அமலாக்கத்துறைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று(29-04-2024) உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில், “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகும் எம்.எல்.ஏ வாக நீடிக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், சாட்சிகளை கலைத்துவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு மன்னிப்பு கோருகிறோம்” எனத் தெரிவித்தது. செந்தில் பாலாஜி தரப்பில், “தனிநபர்களின் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவன ரீதியில் முடிச்சுப் போட்டிருக்கிறது அமலாக்க துறை. செந்தில் பாலாஜி 8 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்.” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை மே 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Comments are closed.