Rock Fort Times
Online News

திருச்சி கோணக்கரையில் தெரு நாய்களுக்கான மீட்பு மையம் – மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்தார் !

திருச்சி மாநகர பகுதிகளில் தெருக்களில் அடிபட்டு, நோய்வாய்ப்பட்ட தெருநாய்கள் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிகின்றன. இதுபோன்ற தெருநாய்களை மீட்டு, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புளூ கிராஸ் அமைப்பின் நிதியில், உறையூர் கோணக்கரை ரோட்டில் தெருநாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தமையத்தில் தெருக்களில் காயமுற்று அல்லது நோய் வாய்ப்பட்டு பரிதாபகரமான நிலையில் சுற்றித்திரியும் நாய்களை  கொண்டு வந்து, அவற்றுக்கு ப்ளூ கிராஸ் அமைப்பின் மூலம் சிகிச்சை அளித்து பராமரிக்கப்பட உள்ளது. தற்போது வரை 25 நாய்களுக்கான இடவசதி  செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து மேயர் மு.அன்பழகன் தெரிவித்ததாவது, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்றது.  தெருநாய்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்தன. இதைத்தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையத்தில் கேட்பாராற்று தெருகளில் வலம் வரும் நாய்கள், வாகன விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை கிடைக்காமல் அவதி படும் நாய்களுக்கு உதவிடும் வகையில் இந்த அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாய்கள் தனித்தனியாக கட்டி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  பொது மக்கள் 98943 69069 என்ற எண்னை தொடர்பு கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் தெரு நாய்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். தகவல் கிடைத்தவுடன் ப்ளூ கிராஸ் ஆம்புலன்ஸ் மூலம் சம்பவ இடத்துக்கு சென்று நாய்கள் மீட்டு வந்து சிகிச்சை அளித்து பராமரிக்கப்படும் என்றார்.  இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணன், நகர் நல அலுவலர் மணிவண்ணன், மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் கா.சென்னுகிருஷ்ணன் , மாமன்ற உறுப்பினர்கள் ,சுகாதார அலுவலர்கள் மற்றும் ப்ளூ கிராஸ் அமைப்பினர் உடன் இருந்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்