முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் முதலீடு ஈர்ப்புச் சுற்றுலாவா?, அல்லது இன்பச் சுற்றுலாவா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று( செப்டம்பர் 17) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இல்லையென்றால் வெளி சந்தையில் வாங்குவது ஏன்? 2000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் வாங்கப்படுகிறது. மின்வெட்டு இல்லை என அமைச்சர் கூறுகிறார். ஆனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசும் நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு நேரிடுகிறது. தமிழக அமைச்சர் பேட்டி அளிக்கும் போதே மின்வெட்டு ஏற்படுகிறது. தமிழக அரசுக்கு கடன் சுமை இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் தேவைதானா? கடன் சுமை சீரானதும் கட்டிக் கொள்ளலாமே. முதல்வர் ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் முதலீடு ஈர்ப்புச் சுற்றுலாவா? இல்லை இன்பச் சுற்றுலாவா? என்று தெரியவில்லை. இதனை அவர்கள் தான் விளக்க வேண்டும். லண்டனில் முதலீடுகளை ஈர்க்க தொழில்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அழைத்துச் செல்லாதது ஏன்? தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுடன் லண்டனில் சென்று ஒப்பந்தம் செய்வது ஏன்? இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவிக்கும். கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை என தமிழ்நாட்டில் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த பின்பு டிமாண்ட் செய்து லஞ்சம் வாங்குகிறார்கள். ஊழலை ஒழித்துவிட்டதாக கூறுகின்றனர். தவெக ஆட்சிக்கு வந்த பிறகே அதிக ஊழல் நடக்கிறது. முன்பெல்லாம் கொடுத்த லஞ்சத்தை வாங்கிக் கொண்டிருந்தனர். இப்போதெல்லாம் டிமாண்ட் செய்து வாங்குகிறார்கள். லஞ்சம் வாங்கவில்லை என்றால் அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தும்போது பணம் எப்படி கைப்பற்றப்படுகிறது?. நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் ஒரு திணிக்கப்பட்ட தேர்தல். குதிரை பேரம் நடத்தி அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்களை தவெகவில் இணைத்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வைத்து திணிக்கப்பட்ட தேர்தல் என்று தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளே கூறுகிறார்கள். இந்த தேர்தலில் மக்கள் தவெகவுக்கு பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.