புதுக்கோட்டையை சேர்ந்தவர் ரம்யா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ்
ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஏ.சி. கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார். இந்த ரயில் நேற்று இரவு 7.45 மணி அளவில் கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பயணிகள் அங்கு இறங்கினர். அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ரம்யாவிற்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருச்சி ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காடு பகுதியைச் சேர்ந்த சந்திரபிரசாத் (வயது 33) என்பதும், இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார். பின்னர் ரம்யா கொடுத்த புகாரின்பேரில், பேராசிரியர் சந்திரபிரசாத்தை திருச்சி ரயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.