பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் மத்திய பேருந்து நிலையம்: ஆம்னி வேன்களில் அடாவடி வசூல், திருச்சியில் இருந்து தஞ்சைக்கு 200 ரூபாய்…! ( வீடியோ இணைப்பு)
தீபாவளி பண்டிகை நாளை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று 30 ம் தேதி அரை நாள் மட்டும் செயல்படும் என்றும் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் போன்ற பிற மாவட்டங்களில் பணியாற்றும் திருச்சி மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று அதிகாலை முதலே திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு பேருந்துகள், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆம்னி பேருந்துகளிலும் இருக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனை சில ஆம்னி வேன் டிரைவர்கள் மற்றும் புரோக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி ஆம்னி வேன்களை நிறுத்திக் கொண்டு பயணிகளிடம் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியில் இருந்து தஞ்சை செல்ல 200 ரூபாயும், கும்பகோணத்திற்கு 350 ரூபாயும் நிர்ணயித்து அடாவடி வசூல் செய்து வருகின்றனர். சரி, சொந்த ஊர் போனால் போதும் என்று நினைத்து அந்த ஆம்னி வேன்களில் ஏறுபவர்களை மணிக்கணக்கில் காக்க வைக்கிறார்கள்.
வேன் நிரம்பி வழிந்ததும் தான் எடுக்கிறார்கள். இதனால் பயணிகளுக்கும், ஆம்னி வேன் புரோக்கர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி ஆம்னி வேன்களை நிறுத்த அனுமதி கிடையாது. ஆனால் இவர்கள் விதிமுறைகளை மீறி நிறுத்திக் கொண்டு பயணிகளிடம் அடாவடி வசூலில் ஈடுபடுகின்றனர். இதனை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளோ, காவல்துறையோ கண்டு கொள்ளவில்லை. அரசு பேருந்தில் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு ரூ.45 -ம், கும்பகோணத்திற்கு 85-ம் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது.ஆனால், ஆம்னி வேன்களில் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.