சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு அமாவாசை நாளில் கோவிலில் தங்கி, மறுநாள் காலை வழிபட்டுச் சென்றால் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் காணப்படுவதால், இக்கோவிலில் அமாவாசை நாளன்று தங்கி வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இவர்களின் வசதிக்காக, கோவில் வளாகப் பகுதியில் அமாவாசை மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், கோவிலின் தெப்பகுளத்தில் 2 சடலங்கள் மிதப்பதை கண்டு பக்தர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மிதந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவர் 30 வயதும், மற்றொருவர் 50 வயது உடையவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சடலமாக மீட்கப்பட்டவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எவ்வாறு இறந்தார்கள்? என சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலின் தெப்பகுளத்தில் 2 சடலங்கள் மிதந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Comments are closed.