கரூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள வஞ்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 27). இவருக்கும், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் நட்பாக பழகியதால் அவர்களது புகைப்படம் மற்றும் வீடியோவை ஒருவருக்கொருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த விக்னேஷ், ஆபாசமாக வீடியோ எடுத்து அனுப்புமாறு மாணவியிடம் பேசி மயக்கி உள்ளார். வீடியோவை பார்த்தவுடன் உடனடியாக “டெலிட்” செய்து விடுகிறேன் என்று கூறவே, அந்த மாணவி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் மூலம் விக்னேசுக்கு அனுப்பியுள்ளார். அதனை, போனின் ஸ்கிரீன் ரெக்கார்டர் மூலம் விக்னேஷ் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.பின்னர் சிலநாள் கழித்து தனியாக நான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும். இல்லையென்றால் உனது ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார். இதனால், பயந்துபோன சிறுமி தனது தாய்- தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், விக்னேசை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் இதுபோல பலரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.
Comments are closed.