திருச்சியில் கலைஞர் பெயரில் புதிய நூலகம், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்- அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று(27-06-2024) நடைபெற்ற கூட்டத்தில், ஓசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும், திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 7-வது நாள் அமர்வு தொடங்கியது. கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதைதொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழகம் முதன்மை மாநிலமாக முன்னேறி இருக்கிறது. தொழில் நிறுவனங்கள் வருவதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மோட்டார் வாகனங்கள், மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. ஓசூருக்கு புதிய பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது. ஓசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்துசெல்லும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படும். கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க பணிகள் தொடங்கப்படும். மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் பெயரில் நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
Comments are closed.