Rock Fort Times
Online News

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் கைது – ரெட்டைமலையில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்…!

திருச்சி பாலக்கரை காஜாபேட்டை மற்றும் பசுமடம் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னாசி, தலைமை காவலர் அஜ்மல் கான் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.  அப்போது இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டு இருந்த ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து வாலிபர் தப்பி ஓடிவிட்டார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் திருச்சி காஜாபேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லாஷா என்பவரது மனைவி பரக்கத் நிஷா (வயது 39 ) என்பதும், தப்பி ஓடிய வாலிபர் அவருடைய மகன் முகமது (20) என்பதும் தெரியவந்தது. கைதான பரக்கத் நிஷாவிடம் இருந்து 19 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதேபோல, திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள ரெட்டைமலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாநகர மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீஸ் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த  ராம்ஜிநகரைச் சேர்ந்த அ.விக்னேஷ் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 11 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து மேற்கொண்ட விசாரணையில், ராம்ஜிநகரைச் சேர்ந்த சக்திவேல் மனைவி பிரேமா, மகன் விஸ்வநாதன் ஆகியோருக்கும் இதில் தொடர்பிருப்பதும், அவர்கள் தலைமறைவானதும் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்