திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் அகோரிகள் வேடத்தில் வந்து வியாபாரிகளிடம் பணம் பறிக்கும் மர்ம கும்பல்- சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!
திருச்சி என்எஸ்பி சாலை, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, காந்தி மார்க்கெட், பெரிய கம்மாள தெரு, சின்ன கம்மாள தெரு, பெரிய செட்டி தெரு, சின்ன செட்டி தெரு, ஜாபர்ஷா தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், பிரபலமான பாத்திரக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகம் என ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு திருச்சி மட்டுமன்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால், இப்பகுதிகளில் பெருமளவில் வர்த்தகம் நடைபெறும். கோட்டை ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட இந்த பகுதிகளில் அகோரிகள் வேடம் அணிந்து மர்ம நபர்கள் சிலர் ஒவ்வொரு கடையாகச் சென்று நாங்கள் காசிக்கு செல்கிறோம் எங்களுக்கு பணம் கொடுங்கள் என்று வியாபாரிகளின் நெற்றியில் திருநீறை பூசியும், மந்திர, தந்திரங்களை சொல்லியும் கட்டாய வசூல் செய்கின்றனர். அவர்களின் தோற்றம் பார்ப்பதற்கு அருவருக்கத்தக்க வகையிலும், பெண்கள் முகம் சுளிக்கும் வகையிலும் இருக்கின்றன. வியாபாரிகள் அவர்களுக்கு ரூ.ஆயிரம் இரண்டாயிரம் என கொடுத்தால் வாங்க மறுப்பதோடு ஐந்தாயிரம், பத்தாயிரம் கொடுங்கள் என்று மிரட்டி வசூலிக்கின்றனர். மேலும், கடைகளில் உள்ள பொருட்களையும் மிரட்டி வாங்கிக் கொள்கின்றனர். சில நாட்கள் கழித்து இன்னொரு குரூப் இதேபோல மீண்டும் வந்து வசூலில் ஈடுபடுகின்றனர். இதனால், வியாபாரிகள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஏற்கனவே மேற்கண்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் மது குடித்துவிட்டு வந்து போதையில் வியாபாரிகளையும், பொருட்கள் வாங்க வரும் பொது மக்களையும் கத்தியை காட்டி மிரட்டி ஒரு கும்பல் பணம் வசூல் செய்து வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே வீடியோ ஆதாரத்துடன் ராக்போர்ட் டைம்ஸ் சுட்டிக்காட்டி இருந்தது. தற்போது அகோரிகள் வேடத்தில் சிலர் வந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் செயல் அரங்கேறி வருகிறது. இதனால் வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கஞ்சா, மது போதையில் வழிப்பறி செய்யும் கும்பல் மற்றும் அகோரி வேடத்தில் வந்து பணம் பறிக்கும் கும்பலை திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.
Comments are closed.