திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை குண்டு கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்…!
அதானியுடன் சந்திப்பு குறித்து டாக்டர் ராமதாஸ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வேறு வேலை இல்லை, அதனால் தான் தினமும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை என்று கூறினார். முதல்வரின் இந்த பேச்சை கண்டித்து பாமகவினர் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல திருச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பி.கே.திலீப்குமார் தலைமையில், கட்சியினர் இன்று(26-11-2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்புச் செயலாளர் வி.எழிலரசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹரிஹரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.கே.ஜே.ரபிக், ஒன்றிய செயலாளர் ஐயப்பன், இளைஞர் அணி பொறுப்பாளர் பி.கே.ஆனந்த் மற்றும் தினேஷ்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற அவர்களை போலீசார் கைது செய்ய சென்றபோது போலீஸாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட செயலாளர் திலீப்குமார் உட்பட 30 பாமக நிர்வாகிகளை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Comments are closed.