திருச்சியில் துணிகரம்: சுவர் ஏறி குதித்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த முகமூடி கொள்ளையர்களுக்கு வலை…!
திருச்சி உறையூர் மெத்தடிஸ் பள்ளி அருகே வசிப்பவர் சங்கீதா. விதவை பெண்மணியான இவர் வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு பேர் முகமூடி அணிந்து கொண்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து சங்கீதாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்தப் பெண் போலீசாரிடம் கூறுகையில், கொள்ளையர்கள் இருவரும் முகமூடி அணிந்து இருந்தனர். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால் நகையை கழற்றி கொடுத்து விட்டேன் என்று கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.