தமிழக தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி குறிப்பிட்ட அளவு சதவீத ஓட்டுகளை பெற்று தமிழக அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்து வருகிறது. ஆனால், அவரது பேச்சு பிற கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக திராவிடம், ஈ.வெ.ரா., பற்றி கூறி வரும் கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாக மாறின. அவரது பேச்சுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரத்தில் சீமானுக்கும், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடு எழுந்ததாக தெரிகிறது. மேலும் தமிழ்த் தேசியத்தில் இருந்து அவர் விலகி செல்வதாகவும் கட்சியினர் குற்றம் சாட்டி வருவதோடு கட்சியில் இருந்து காளியம்மாள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகியும் உள்ளனர். இந்நிலையில், சீமான் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க திட்டமிட்டதாக 10 பேரை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவர்கள், பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு செல்ல முயன்றபோது போலீசிடம் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெட்ரோல் குண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Comments are closed.