திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் மத்திய பேருந்து நிலையத்தின் நிலை என்னவாகும்? * அமைச்சர் கே.என்.நேரு பதில்…!
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(16-02-2025) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அடிப்படை வசதிகள் அனைத்தையும் தரமாக அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம் என்றார். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் வணிக வளாகம் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதே… என்று செய்தியாளர்கள் கேட்பதற்கு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை ஒருபோதும் அகற்ற மாட்டோம். எப்போதும்போல பேருந்து நிலையம் செயல்படும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. பட்ஜெட்டில் கூட தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துவிட்டோம். ஆகையால் தான் மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது எதுவும் நடக்க போவதில்லை. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என்றார்.
Comments are closed.