Rock Fort Times
Online News

தேர்தல் நெருங்கியவுடன் கூட்டணி குறித்து அறிவிப்போம்…

திருச்சியில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி....

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் செய்தியாளா்களை சந்தித்து பேசினாா். அப்போது அவா்  கூறியதாவது :-

கர்நாடக அரசு, காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய   தண்ணீரை முறையாக கொடுக்கத் தவறியதன் காரணமாக, தமிழக விவசாயிகள், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கிக்கடனைக் கூட செலுத்த முடியாத நிலை. தமிழக அரசை பொறுத்தவரை 3 ஆண்டுகளாக குறுவைக்கான காப்பீடு தொகையை விடுவிக்கவில்லை. தமிழக அரசு, விவசாயிகள் பிரச்சனையில் சுணக்கம் காட்டுவதைப் பார்த்தால், அரசியல் உள்நோக்கம் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழகத்தில் உடனடியாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி, கர்நாடக அரசை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தின் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. கூட்டாட்சி தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக எல்லா மாநில அரசும் செயல்பட வேண்டும். நதிநீர் பங்கீடு, இணைப்பு போன்ற பிரச்னைகளில் நிரந்தரத்தீர்வை உருவாக்கும் வகையில் ஒத்தக்கருத்தை ஏற்படுத்த வேண்டும். தேசிய அளவில் முதல் கட்சியாக, பெரும்பான்மை கட்சியாக பாஜக உள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சி திமுகவாக இருந்தாலும், பெரிய கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், ஆட்சியாளர்களின் தவறான செயல்பாட்டின் அடிப்படையில், எதிர்மறை ஓட்டுகள் அதிகரித்து வருகிறது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டனர். வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது. மக்கள் மீது நிறைய வரிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கும் போது, தேர்தலில் மத்திய அளவிலும், மாநில அளவிலும் நம்பிக்கை பெற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிட்டால், ஆளும் கட்சிக்கு நிச்சயமாக ஒரு சவாலான தேர்தலாக இருக்கும். தமாகாவை பொறுத்தவரையில், இன்றைய தமிழகத்தின் அரசியல் சூழலை பார்க்கும் போது, தேர்தலுக்கு இன்னும், 6, 7 மாதங்கள் இருப்பதால், தேர்தல் களப்பணியை வலுப்படுத்தி, மக்கள் தொடர்பை அதிகரிப்போம்.தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து முறையாக அறிவிப்போம். அது நாட்டு நலன், மக்கள் நலன், இயக்க நலன் சார்ந்ததாக இருக்கும் . இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி, மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால்,தொழிலதிபர் தர்மராஜ், எடத்தெரு ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்