வைகோ எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி…ராகுல் காந்தி…என ஆர்ப்பரித்த திருச்சி எம்பி துரை வைகோ… (வீடியோ இணைப்பு)
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வைகோ ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகளின் தொகுப்பான நாடாளுமன்றத்தில் வைகோ’ ( Vaiko in Parliament ) என்ற புத்தகம் நேற்று(04-08-2026) வெளியிடப்பட்டது. புது டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக ராகுல் காந்திக்கு வைகோ சால்வை மற்றும் ஏலக்காய் மாலை அணிவித்தார். அந்த நேரத்தில் அருகில் இருந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ராகுல் காந்தி…ராகுல் காந்தி…என ஆர்ப்பரித்தார். இந்த நிகழ்வில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் எம்.ஏ. பேபி, விசிக தலைவர் திருமாவளவன், தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் தவெக சார்பில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றார். விழா மேடையில் ராகுல் காந்தியுடன் அகிலேஷ் யாதவ் மற்றும் விஜய் இருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டிருப்பது அரசியல் அரங்கில் பேசு பொருளாகியுள்ளது. இந்தியா கூட்டணியிலிருந்து திமுக விலகியதை அடுத்து, அந்த கூட்டணியில் தவெகவை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவிய நிலையில், ராஜ்மோகனின் பங்கேற்பும், முதல்வர் விஜய்யின் புகைப்படமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.