திருச்சி மாநகராட்சி சார்பில் திங்கட்கிழமை தோறும் மேயர் மு.அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் நேரடியாக சென்று மேயர் களஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மண்டலம் 5, வார்டு எண் 8 க்கு உட்பட்ட பாத்திமா நகர் பகுதி பொதுமக்கள் சுகாதார வளாகம் புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரி மனு அளித்தார்கள்.
அந்த மனுவின் அடிப்படையில் மேயர் அன்பழகன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் புதிதாக அமைக்கப்பட உள்ள சுகாதார வளாக இடத்தை பார்வையிட்டு ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கும், இளநிலை பொறியாளருக்கும் உத்தரவிட்டார். பழுதடைந்த சுகாதார வளாகத்தை அகற்றிவிட்டு புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கு விரைவில் ஒப்பந்தப்பள்ளி கோரி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் சுகாதார வளாகத்தை கட்டி கொடுக்கவும், அதேபகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் வெங்கட்ராமன் , உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் மாமன்ற உறுப்பினர் பங்கஜம் மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.