தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: கருப்புச்சட்டை அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கே.என்.நேரு…!
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என்.நேரு இன்று( ஏப்.16) காலை 62 -வது வார்டு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராமச்சந்திர நகர், பஞ்சப்பூர், செங்குறிச்சி, செட்டியபட்டி ஆகிய பகுதி மக்களிடம் நடந்து சென்றும், திறந்த வேனில் நின்ற படியும் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது அவர், கீழபஞ்சப்பூர் பகுதி மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கடந்த ஐந்தாண்டுகளில் செய்துள்ளோம். கிராமப்புற பகுதியாக இருந்த கீழபஞ்சப்பூர் தற்போது மாநகரப் பகுதிக்குள் வந்துவிட்டது. அருகே பேருந்து நிலையம் வந்துள்ளது. திமுக, மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பு இந்த மக்களுக்கு இன்னும் ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அமைச்சருடன் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று வாக்கு சேகரித்தனர். தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று தங்களது இல்லங்களில், கடைகளில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றி
மத்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என திமுக தலைமை அறிவித்து இருந்தது. அதன்படி, அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Comments are closed.