திருவெறும்பூர் அருகே கல்லணை கால்வாயில் குளித்த போது துயரம்: நீரில் மூழ்கி சிறுமி பலி, தந்தையை தேடும் பணி தீவிரம்…!
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (40). பெல் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கிருத்திகா (13), ஆஷிகா (6) என இரு மகள்கள். ஆஷிகா, பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று(15-09-2024) மதியம் இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு பத்தாளபேட்டை பகுதியில் உள்ள கல்லணை கால்வாயில் சுரேஷ் குளிக்க சென்றுள்ளார். அப்போது கிருத்திகா தண்ணீரில் இறங்காமல் கரையில் அமர்ந்திருந்தார். சுரேஷும், ஆஷிகாவும் கல்லணை கால்வாயில் இறங்கி சந்தோசமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆஷிகா நீரில் மூழ்கினாள். மகளைக் காப்பாற்ற சுரேஷ் முயன்றார். அப்போது அவரும் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்து கிருத்திகா கூச்சலிட்டார்.
அவரது சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் குதித்து இருவரையும் தேடினர். அவர்களில் ஆஷிகாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிறுமியை பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த தகவலின்பேரில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆஷிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Comments are closed.