திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர், கடந்த 1-7-2020 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் டியூக் கிரீம் ஃபார்ஃபன் என்ற ரூ. 5 மதிப்பிலான பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வாங்கினார். அதில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டானது காலாவதி ஆனதை அறியாமல் சாப்பிட்ட அவரது மகன் வாந்தி பேதி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக தர்மலிங்கம் தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியபோது, எந்தப் பதிலையும் அந்த நிறுவனம் கூறவில்லை. இதையடுத்து அவர் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் ஆர். காந்தி, உறுப்பினர்கள் ஜே.எஸ். செந்தில்குமார், ஆர்.சாயீஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, காலாவதியான பிஸ்கட்டை விற்ற நிறுவனம் பாதிக்கப்பட்ட தர்மலிங்கத்துக்கு அந்த பிஸ்கட்டுக்கு உரிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். காலாவதி பிஸ்கட்டை சாப்பிட்டு அவரது மகனுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால் உருவான மன உளைச்சல் மற்றும் கஷ்டத்துக்கு இழப்பீடாக ரூ. 5,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 5,000 கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
Comments are closed.