Rock Fort Times
Online News

திருச்சி லால்குடி அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகொலை- 2 பேர் கைது…!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார். இவரும், ஆதிகுடியை சேர்ந்த ராஜா என்கிற கலைப்புலி ராஜாவும் நண்பர்கள்.  இருப்பினும் அவர்களிடையே மனக்கசப்பு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.  இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நவீன்குமார், கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் லால்குடியில் உள்ள ஒரு மதுபான கடையில் மது குடித்துக் கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.  இந்நிலையில், நேற்று இரவு கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, தனியார் பள்ளி அருகே நவீன் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.  இதில் படுகாயம் அடைந்த நவீன்குமார் ஆபத்தான நிலையில் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக  திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று(04-07-2024) அதிகாலை இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கலைப்புலி ராஜாவின் நண்பர்களான ஸ்ரீநாத், பாலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  மேலும், முக்கிய குற்றவாளியான கலைப்புலி ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  லால்குடி டாஸ்மாக் மதுபான கடை அருகில் அமர்ந்து குடிமகன்கள், மது  குடிப்பதும், தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது .  இந்த டாஸ்மாக் மதுபான கடை லால்குடி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.  ஆகவே, இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்